ஆவடி ரெயில் நிலையம் அருகே சோகம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் பலி

ஆவடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். சிறுவன் படுகாயம் அடைந்தான்.
ஆவடி ரெயில் நிலையம் அருகே சோகம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பெண் உள்பட 2 பேர் பலி
Published on

ஆவடி,

ஆவடி ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு 9.30 மணியளவில் பொதுமக்கள் ரெயில் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்தது.

அந்த நேரத்தில் ஆவடி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் பகுதி நோக்கி பொதுமக்கள் சுமார் 5 பேர் வந்தனர். அதில் ஒரு பெண் போலீசும் இருந்ததாக தெரிகிறது. சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் வரை நின்று கொண்டிருந்த பொதுமக்கள், அந்த ரெயில் சென்றதும் உடனடியாக தண்டவாளத்தை கடந்து மறுபக்கம் செல்ல முயன்றனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது

அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி மற்றொரு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நடுவழியில் அப்படியே நின்று விட்டனர்.

ஆனால் ஒரு ஆண், ஒரு பெண், சிறுவன் ஆகிய 3 பேர் மட்டும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதற்குள் சென்றுவிடலாம் என்று நினைத்து ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர்.

அதற்குள் 3 பரும் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் 3 பேர் மீதும் மோதியது. இதில் 3 பேரும் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.

2 பேர் பலி

இதில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண், 40 வயது மதிக்கத்தக்க பெண் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். இந்த காட்சியை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி ரெயில்வே போலீசார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மலும் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான 2 பேரும் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? இருவரும் உறவினர்களா? படுகாயம் அடைந்த சிறுவன் இவர்களுடன் ஒன்றாக வந்தவரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com