தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கு ஆந்திர மாநிலம் வரதபாளையத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. சுமதியின் கண் பார்வை குறைபாட்டை திருமணத்தின்போது மறைத்ததாகக் கூறி, அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோதே கணவர் பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் சுமதி, தனியாக தனது 2 வயது குழந்தையான யாஷிகாவை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று சுமதி வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, யாஷிகா வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து நீரை எடுத்து விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை அலறியது.

குழந்தையின் சத்தம் கேட்டு சுமதி பதறியபடி கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்த குழந்தையை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், யாஷிகா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com