நெல்லையில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம், ஏர்வாடி பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மஞ்சங்குளம், நடுத்தெருவை சேர்ந்த கைலாசம் மகன் தளவாய்பாண்டி (வயது 25) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சுதா கவனத்திற்கு வந்தது.
இதேபோல் நெல்லை மாவட்டம், விஜயநாராயணம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கீழபண்டாரபுரம், நடுத்தெருவை சேர்ந்த ஸ்டாலின் மகன் அருண்பாண்டியன் (வயது 26) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கொலை முயற்சி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் பிரேமா கவனத்திற்கு வந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஏர்வாடி, விஜயநாராயணம் பகுதி இன்ஸ்பெக்டர்கள் மேற்சொன்ன 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், தளவாய்பாண்டி, அருண்பாண்டியன் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (04.04.2025) அடைக்கப்பட்டனர்.