தூத்துக்குடியில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாட்ச்மேன் கைது

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீசார் சுந்தர்நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், முகிலரசன், வடிவேல் தலைமை காவலர் ஜெகன் ஆகியோர் சுந்தர்நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் கையில் பையுடன் வந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவரிடம் குட்கா, கூல் லிப், புகையிலை போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சுமார் 20 கிலோ இருந்தது.
இதனையடுத்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் விருதுநகர் மாவட்டம், கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் என்றும் அவர் முத்தையாபுரம் சுந்தர்நகரில் தங்கியிருந்து சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு கம்பெனியில் இரவு வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பகல் நேரத்தில் புகையிலை வியாபாரமும் செய்து வந்துள்ளார் என்று தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து, அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






