

கொரோனா தடுப்பூசி
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சராசரியாக 20 முதல் 30 சதவீதம் பேரே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 114 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 2-வது டோஸ் செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போட பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி மருந்துகளில் 4 மணி நேரம் முடிந்த, 25 ஆயிரம் கொரோனா தடுப்பு மருந்து டோஸ் வீணாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் முகாமுக்கு வருகிறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதே எங்களது முன்னுரிமை என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
முன்னுரிமை
கொரோனா தடுப்பூசி மருந்துகள் 10 பயனாளிகளுக்கு செலுத்தும் விதமாக 10 டோஸ் கொண்ட மருந்து பாட்டில்களில் வந்துள்ளது. இந்த தடுப்பு மருந்து பாட்டில்களை ஒரு முறை திறந்துவிட்டால் அதில் உள்ள 10 டோஸ் மருந்தை 4 மணி நேரத்துக்குள் 10 பயனாளிகளுக்கு போட வேண்டும். கோவின் செயலி மூலம் மருந்து போடும் நேரம் பயனாளிகளுக்கு தெரிவிக்கப்படும். இந்தநிலையில் கொரோனா தடுப்பு மருந்து போட்டுக்கொள்ள 5 பயனாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு மருந்து போடுவது முறையா அல்லது அடுத்த 5 பேர் வரும் வரை காத்திருப்பதா?
தமிழகத்தில் தற்போது பயனாளிகள் அனைவருக்கும் தடுப்பு மருந்து போடுவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே ஒருமுறை திறக்கப்பட்ட தடுப்பு மருந்து முடிவடைந்தவுடன் அடுத்ததை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைசியில் மீதம் இருக்கும் சில டோஸ்களை பாதுகாக்க முடியாத காரணத்தால் வீணாகியுள்ளது. தமிழக சுகாதாரத்துறையை பொறுத்தவரை பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே முன்னுரிமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.