'சார்ஜ்' போடப்பட்டிருந்த செல்போன் வெடித்து சிதறியதில் 3 பேர் படுகாயம்

இடையக்கோட்டை அருகே இரவு முழுவதும் ‘சார்ஜ்’ போடப்பட்டிருந்த செல்போன் வெடித்து சிதறியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
'சார்ஜ்' போடப்பட்டிருந்த செல்போன் வெடித்து சிதறியதில் 3 பேர் படுகாயம்
Published on

இடையக்கோட்டை அருகே இரவு முழுவதும் 'சார்ஜ்' போடப்பட்டிருந்த செல்போன் வெடித்து சிதறியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

செல்போன் வெடித்தது

திண்டுக்கல் மாவட்டம் இடையக்கோட்டை அருகே உள்ள இளந்தாரியூரை சேர்ந்தவர் சந்துரு (வயது 27). விவசாயி. இவரது உறவினர்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உருதுமலைப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (57), தண்டிக்காரபாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (66). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் சந்துருவின் வீட்டிற்கு வந்தனர். அன்றைய தினம் இரவு 3 பேரும் சந்துருவின் வீட்டில் தூங்கினர். அப்போது சந்துரு தனது செல்போனை அருகில் இருந்த 'பிளக் போர்டில்' சார்ஜ் போட்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை அவரது செல்போன் திடீரென்று வெடித்து சிதறியது. அதில் இருந்து வெளியேறிய தீப்பொறி பறந்து அயர்ந்து தூங்கி கொண்டிருந்த சந்துரு, அவரது உறவினர்களின் மீது பட்டது. இதில், அவர்களது உடலில் தீப்பற்றி எரிந்தது. இதனால் 3 பேரும் அலறி துடித்தனர்.

3 பேர் படுகாயம்

அதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் சந்துருவின் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தனர். அங்கு சந்துரு, பழனிசாமி, வேலுச்சாமி ஆகியோர் மீது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் போர்வையால் தீயை அணைத்தனர். இருப்பினும் 3 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பு

இதுகுறித்து இடையக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில், சந்துரு செல்போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டுள்ளார். அப்போது மின்னழுத்தம் அதிகமாகி செல்போன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில், தீப்பொறி பறந்து 3 பேரின் துணிகள் மீது பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.

செல்போன் வெடித்து சிதறியதில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com