3 கடைகளின் பூட்டை உடைத்து பணம், செல்போன்கள் திருட்டு

அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம், செல்போன்களை திருடிய சம்பவம் அய்யலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 கடைகளின் பூட்டை உடைத்து பணம், செல்போன்கள் திருட்டு
Published on

செல்போன் கடை

வடமதுரை அருகே உள்ள அய்யலூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவர், அய்யலூர் பேரூராட்சி அலுவலகம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை கடையை திறக்க விஜயகுமார் வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் பழுது பார்ப்பதற்காக வைத்திருந்த 6 செல்போன்கள், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

சைக்கிள் பழுதுபார்க்கும் கடை

இதேபோல் விஜயகுமாரின் கடை அருகே, கிணத்துப்பட்டியை சேர்ந்த பரமன் (45) என்பவர் சைக்கிள் மற்றும் மிக்ஸி, கிரைண்டர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். அந்த கடையின் பூட்டையும் உடைத்து, அங்கிருந்த ரூ. 200-ஐ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

மேலும் அந்த கடையின் அருகே இருந்த கருவார்பட்டியை சேர்ந்த முருகேஸ்வரி (30) என்பவரின் கணினி மையத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்று விட்டனர்.

அய்யலூரில் பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளை இவர்கள் பதிவு செய்தனர். மேலும் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் திருடப்பட்ட சம்பவம் அய்யலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com