சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 351 வழக்குகளுக்கு தீர்வு

மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 351 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 351 வழக்குகளுக்கு தீர்வு
Published on

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குடும்ப நல வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம், கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் தலைமை தாங்கினார். கடலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி அருள்முருகன், மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் முதலாவது சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான பிரபாகர், மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-3 நீதிபதி ரகோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து நில எடுப்பு வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சுரேஷ்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் செயலாளர் சிவசிதம்பரம் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

ரூ.8 கோடி வசூல்

இதேபோல் கடலூர் மாவட்ட தாலுகா நீதிமன்றங்களான சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி மற்றும் திட்டக்குடி நீதிமன்றங்களிலும் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 668 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 351 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.8 கோடியே 85 லட்சத்து 91 ஆயிரத்து 235 வசூலிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com