

சேலம்,
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் தெலுங்கனூர் உள்ளது. இந்தப் இடம் 1990-ம் ஆண்டு வரை அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பின்னர், வனப்குதி அழிந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேட்டூர் அணை நீர்மட்டம் சரியும் போது, அப்பகுதியில் ஏராளமான புதைகுழிகள் இருப்பதை காண முடியும். தெலுங்கனூரை சுற்றி அதிகளவில் கல் வட்டங்கள் உள்ளன.
இந்த கல் வட்டங்களை உள்ளூர் மக்களால் பாண்டியன் திட்டுகள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ததில் வாள், அம்பு, முதுமக்கள் தாழி, பெரிய மற்றும் சிறிய அளவிலான பானை மற்றும் கருவிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளித்தன் பேரில் தமிழக அரசின் அனுமதியையடுத்து முறையான அகழாய்வு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், தெலுங்கனூர் மற்றும் மாங்காடு காவிரி கரையோரப் பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வில் சுமார் 3,600 ஆண்டுகள் பழமையான மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழாய்வின்போது முழுமையான நிலையில் மனித எலும்புக்கூடுகள் அவற்றுடன் அடக்கம் செய்யப்பட்ட ஹை கார்பன் எக்கு உலோகத்தால் செய்யப்பட்ட தற்காப்பு வாள், தாலிகள், சுண்ணாம்பு மணிகள், மண்பானைகள் மற்றும் பல்வேறு ஈமப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின்போது, கிடைத்த பொருட்களை வைத்து பரிசோதனை செய்ததன் மூலம் அப்பகுதியில் புதிய கற்கால மனிதர்கள் மற்றும் இரும்பு கால மனிதர்கள் வாழ்ந்ததும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.