யூரியா உரத்தை ஹெராயின் என ஏமாற்றி விற்க முயற்சி சென்னையில் 4 பேர் கைது

சென்னையில் யூரியா உரத்தை, ஹெராயின் போதைப்பொருள் என்று ஏமாற்றி விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
யூரியா உரத்தை ஹெராயின் என ஏமாற்றி விற்க முயற்சி சென்னையில் 4 பேர் கைது
Published on

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியைச்சேர்ந்தவர் முத்துராஜா (வயது 40). இவர் தன்னிடம் ஹெராயின் போதைப்பொருள் இருப்பதாகவும், அதை விற்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என்று தனது நண்பரான அருண்குமாரிடம் (31) கூறினார். அருண்குமார் இதுபற்றி தமீம் அன்சாரி, முகமது சபி என்ற தனது நண்பர்களிடம் தெரிவித்தார்.

சென்னை மாதவரம் பகுதிக்கு ஹெராயின் போதைப்பொருளுடன் வரும்படி தமீம் அன்சாரியும், முகமது சபியும், அருண்குமாரிடம் கூறினார்கள். அதன்படி1 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் என்று ஒரு பிளாஸ்டிக் பையில் வெள்ளை நிற பவுடர் போன்ற பொருளை எடுத்துக்கொண்டு முத்துராஜாவும், அருண்குமாரும் மாதவரம் பகுதிக்கு வந்தனர். அங்கு தமீம் அன்சாரியும், முகமது சபியும் காத்திருந்தனர்.

போலீசார் மடக்கினார்கள்

இந்த தகவல் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு தெரிய வந்தது. அவர் தனிப்படை போலீசாரை மாதவரம் பகுதிக்கு அனுப்பி வைத்தார். தனிப்படை போலீசார் முத்துராஜா, அருண்குமார் மற்றும் தமீம்அன்சாரி, முகமது சபி ஆகியோரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஹெராயின் என்று கூறப்பட்ட பொருளை கைப்பற்றினார்கள்.

அந்த வெள்ளை நிற பவுடர் உண்மையிலேயே ஹெராயின் போதை பொருளா என்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அது ஹெராயின் போதைபவுடர் இல்லை என்பதும், தூளாக்கப்பட்ட யூரியா உரம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. யூரியா உரத்தூளை, ஹெராயின் போதைப்பொருள் என்று ஏமாற்றி விற்க முயன்றது அம்பலமானது.

4 பேரும் கைது

தனிப்படை போலீசார் முத்துராஜா, அவரது நண்பர் அருண்குமார் மற்றும் தமீம்அன்சாரி, முகமது சபி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அருண்குமார் தேவகோட்டையைச் சேர்ந்தவர். தமீம்அன்சாரி ராமநாதபுரம் மாவட்டம் வெளிபட்டினம் என்ற ஊர்க்காரர். முகமது சபி மதுரையில் வசிக்கிறார்.

இவர்கள் இந்த போலி ஹெராயின் போதைப்பொருளை கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com