

நெல்லை,
நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்த பெட்டைக்குளத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது கார் முழுவதும் தீக்கிரையான நிலையில், காரின் உள்ளே 4 உடல்கள் எரிந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வருகை தந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்கட்ட விசாரணையில் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
காரில் எரிந்த நிலையில் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் திசையன்விளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.