திண்டுக்கல் கோர விபத்தில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு: ஜோதிமணி எம்.பி. வேதனை

இந்த ஈடுசெய்ய முடியாத பெருந்துயரத்தில் ஒரு சகோதரியாக அவர்களோடு நான் நிற்கிறேன் என ஜோதிமணி எம்.பி. தெரிவித்தார்.
திண்டுக்கல் கோர விபத்தில் 4 சிறுவர்கள் உயிரிழப்பு: ஜோதிமணி எம்.பி. வேதனை
Published on

சென்னை,

​விளையாடித் திரியும் வயதில், எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுப் பிள்ளைகளின் உயிர் இப்படி அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பதை எவராலும் அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

4 சிறுவர்கள் பலி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த புத்தூர் கிராமத்தில், சாலையோரம் அமர்ந்திருந்த 4 சின்னஞ்சிறு பிள்ளைகள் மீது வாகனம் மோதி அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர் என்ற கோரச் செய்தி கேட்டு என் நெஞ்சம் பதைபதைக்கிறது.

என்ன சொல்லி அந்தப் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் வார்த்தைகளின்றித் தவிக்கிறேன்.

​விளையாடித் திரியும் வயதில், எந்தத் தவறும் செய்யாத அந்தப் பிஞ்சுப் பிள்ளைகளின் உயிர் இப்படி அநியாயமாகப் பறிக்கப்பட்டிருப்பதை எவராலும் அவ்வளவு எளிதில் கடந்துபோக முடியாது. தங்கள் உலகமாக நினைத்து வளர்த்த பிள்ளைகளை இழந்து, கதறித் துடிக்கும் அந்தக் குடும்பத்தினரின் கண்ணீருக்கு இந்த உலகத்தில் எந்த ஆறுதலும் ஈடாகாது.

இந்த ஈடுசெய்ய முடியாத பெருந்துயரத்தில் ஒரு சகோதரியாக அவர்களோடு நான் நிற்கிறேன்.

மாபெரும் குற்றம்

​இந்தக் கொடூர விபத்தை ஏற்படுத்திவிட்டு, வீதியில் உயிருக்குத் துடித்த குழந்தைகளைக் காப்பாற்ற முனையாமல், ஈவிரக்கமின்றித் தப்பியோடிய அந்த மனிதநேயமற்ற செயல் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். வடமதுரை காவல்துறை உடனடியாக விசாரணையை மேற்கொண்டு, அந்த வாகனத்தையும் குற்றவாளியையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

​மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வரும் நபருக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அவர் விரைவில் முழுமையாக நலம்பெற்றுத் திரும்ப மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com