4 அமைச்சர்கள் மாற்றம்? முதல்-அமைசர் விஜய் முடிவு

சென்னை கோட்டையில் ஒவ்வொரு அமைச்சர்களின் அறையிலும் போலீஸ் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
 முதல்-அமைசர் விஜய்
Published on

சென்னை,

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தவெக ஆட்சி

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியை பிடித்தது. முதல்வராக விஜய் பதவியேற்றார். அவரது கேபினட்டில் விஜய்யுடன் சேர்த்து 35 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இதில் செங்கோட்டையனை தவிர அனைவருமே முதல் முறை அமைச்சர்கள் ஆவர். இதனால், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை மூலமாக தகவல்களை முதல்-அமைச்சர் விஜய் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவை

இந்தநிலையில், தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் 4 அமைச்சர்கள் நீக்கப்படலாம் என தெரிகிறது.

லஞ்சம் இல்லாத ஆட்சி

திராவிட கட்சிகளின் 59 ஆண்டு கால அரசியல் ஆதிக்கத்தை உடைத்து, தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சியை அமைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய் லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்த பாடுபட்டு வருகிறார்.

பொதுமக்கள் யாரும் லஞ்சம் கொடுக்காதீர்கள். அதையும் மீறி அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆட்சி அமைத்ததில் இருந்தே முதல்-அமைச்சர் விஜய் இதை வலியுறுத்தி வருவதால் மேல்மட்ட அளவில் உயர் அதிகாரிகள் யாரும் இப்போது லஞ்சம் வாங்குவதில்லை. அரசு அலுவலகங்களில் இப்போது கீழ்மட்ட அளவிலும் லஞ்சம் கேட்க பயப்படுகின்றனர்.

தூய்மையான ஆட்சியை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள முதல்-அமைச்சர் விஜய், தனது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று அமைச்சரவை கூட்டத்தின் போதே அறிவுறுத்தினார்.

போலீஸ் கண்காணிப்பு

அதுமட்டுமின்றி சென்னை கோட்டையில் ஒவ்வொரு அமைச்சர்களின் அறையிலும் போலீஸ் கண்காணிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. யார்-யார் சந்திக்க வருகிறார்கள். டிரான்ஸ்பர்களுக்கு யாரேனும் பணம் வாங்குகிறார்களா? என்பதை கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள்.

சிபாரிசு கடிதம் பெறுவதற்கு பணம் பெறுகிறார்களா? என்பதையும் கண்காணித்து கொண்டே இருக்கிறார்கள். மொத்தத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பிலேயே உள்ளனர். இதையறிந்து யாரும் இப்போது பணம் வாங்குவதில்லை. ஆனாலும் ஒரு சில அமைச்சர்கள் மீதான மறைமுக குற்றச்சாட்டு புகார்கள் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் ஆரம்பத்திலேயே 'களை' எடுக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார்.

இதற்காக தனது அமைச்சர்களின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்த ரகசிய ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்-அமைச்சர் விஜய் தனது முதல் அமைச்சரவையை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடர்

இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு அமைச்சர் உள்பட 4 அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரால் நியமிக்கப்பட்டு தலைமைச் செயலாளர் எம்.சாய்குமார் தயாரித்த ரகசிய செயல் திறன் மதிப்பாய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக ஒவ்வொரு அமைச்சரின் செயல்திறன் குறித்தும் முதல்-அமைச்சர் விஜய் விரிவான அறிக்கையை கோரியிருந்தார். அந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 5-ந்தேதி தொடங்க இருப்பதால் அடுத்த மாதம் சட்டசபை கூட்டம் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று தெரிய வருகிறது. இதனால் அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com