ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

கோப்புப்படம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மட்டுமின்றி மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 4 பேரை கைது செய்தனர். அதோடு மீனவர்களின் விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






