

சென்னை,
கொரோனா மிரட்டலுக்கு இடையே ஊரடங்கு தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ரெயில் சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. தினசரி 200 ரெயில்கள் மட்டும் இயக்கப்படும் என்று இந்தியன் ரெயில்வே அறிவித்து உள்ளது.
தெற்கு ரெயில்வே சார்பில் தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்கள் மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கும் செல்கின்றன. இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
இந்தநிலையில் இந்த சிறப்பு ரெயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசு உத்தரவின்படி ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரெயில் மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ஆன்-லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெற்று இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.