

சென்னை,
தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த 5ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந் தேதியும் தொடங்கின. கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகிறார்கள்.
இதனிடையே தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 31-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று நடந்த 11ஆம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கு 44,394 மாணவர்கள் வரவில்லை என்று தேர்வுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத்தேர்வில் 43,533 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்று தேர்வுத்துறை தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.