

சென்னை,
தமிழ்நாடு முழுவதும் 46 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை பணியிட மாற்றம் செய்து. டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அவர் பிறப்பித்த மாறுதல் பட்டியலில், சென்னை உதவி கமிஷனர்கள் சிலரும் இடம்பெற்றுள்ளனர்.
தாம்பரம் மற்றும் ஆவடி கமிஷனரகத்திலும் உதவி கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் மகேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். ஆவடி கமிஷனரகத்தில் குற்ற ஆவண காப்பகத்தில் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் முத்துராஜா, லஞ்சஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்பார்.
ஆவடி கமிஷனரகத்தில் உளவுப்பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவண்ணன், காஞ்சீபுரம் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், பொன்னேரி உதவி கமிஷனராக தமிழ்வாணன் பொறுப்பேற்பார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த முகமது நாசர். சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. பொறுப்பை கவனிப்பார்.
சென்னை ஐகோர்ட்டு உதவி கமிஷனராக பாலாஜி பதவியேற்பார். சென்னை தாம்பரம் கமிஷனரகத்தில் மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக மகேஷ் பொறுப்பேற்பார். ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் நலப்பிரிவு உதவி கமிஷனராக சஞ்சீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி உதவி போலீஸ் கமிஷனராக சம்பத் பதவியேற்பார். சென்னை அயனாவரம் உதவி கமிஷனராக பணியாற்றும் வேலு, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். சி.பி.சி.ஐ.டி. 'சைபர் கிரைம்' பிரிவில் டி.எஸ்.பி.யாக ராஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் கமிஷனரகத்தில் நலப்பிரிவு உதவி கமிஷனராக ஹரிசங்கரி பொறுப்பேற்பார்.