திருவள்ளூர்: விவசாயி வீட்டில் நகை திருடிய வழக்கில் 5 பேர் கைது - 70 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

திருவள்ளூரில் விவசாயி வீட்டில் நகை திருடிய வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்: விவசாயி வீட்டில் நகை திருடிய வழக்கில் 5 பேர் கைது - 70 சவரன் தங்க நகைகள் பறிமுதல்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருப்பதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி ஆவார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், மணிவண்ணன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

வீட்டில் கொள்ளை

இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதியன்று சீனிவாசன் தனது மகன் மணிவண்ணனை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு மனைவியுடன் சென்றார்.

இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 சவரன் தங்க நகையும், ரொக்கப்பணம் ரூபாய் 20 ஆயிரமும் திருடு போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவர் மப்பேடு போலீசில் புகார் செய்தார்.

குற்றவாளிகள் கைது

இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருவள்ளூர் டி.எஸ்.பி சந்திரதாசன் தலைமையிலான தனிப்படை போலிசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த அரவா பாபு (வயது 27), மற்றும் திருவள்ளூரை சேர்ந்த பாபு (40), ரஞ்சித்குமார் (23), பவுன் (21), நாகராஜன் (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் முக்கிய குற்றவாளியான நெல்லூரை சேர்ந்த அரவா பாபு மீது ஆளில்லாத வீட்டில் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

நகை மீட்பு

மேலும் இவர் தனது கூட்டாளிகளான பாபு,ரஞ்சித்குமார், நாகராஜன்,பவுன் ஆகியோருடன் இணைந்து மப்பேடு, மணவாளநகர், ஊத்துக்கோட்டை, கவரப்பேட்டை, கும்மிடிப் பூண்டி, திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோட்டமிட்டு ஆளில்லா வீட்டில் திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 70 சவரன் தங்க நகை மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட அரவா பாபு, பாபு, ரஞ்சித்குமார், நாகராஜன், பவுன் ஆகிய 5 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட மப்பேடு போலீசார் மற்றும் தனிப்படை போலீசாரை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வீ.வருண்குமார் வெகுவாக பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com