

புதுடெல்லி,
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இந்த மாதத்தில் நடைபெற உள்ளது. அதனுடன் சேர்த்து, 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளா மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் நாளை (ஏப்ரல் 9-ந்தேதி) ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.
மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
சட்டசபை தோ்தல் தொடங்க உள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 9-ம் தேதி) காலை 7 மணி முதல் ஏப்ரல் 29 மாலை 6.30 மணி வரை கருத்து கணிப்புகளை நடத்தவோ அல்லது வெளியிடவோ தடை விதிக்கப்படுவதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 9-ந்தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ந்தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை மேற்கொள்ளவோ அல்லது அவற்றை வெளியிடவோ கூடாது. இந்த காலகட்டத்தில் கருத்து கணிப்புகளை நடத்துவது அல்லது அவற்றை வெளியிடுவது என்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் 126-ஏ பிரிவை மீறுவது ஆகும். இதற்கு, 2 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
வாக்குப்பதிவு நிறைவு பெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக, தோ்தல் நடைபெறும் தொகுதி அல்லது மாநிலங்களில் தோ்தல் பிரசாரத்தை கட்சியினா் நிறைவு செய்ய வேண்டும். அதன்படி, அசாமில் நேற்று மாலை 5 மணிக்கும், கேரளம், புதுச்சேரியில் நேற்று மாலை 6 மணிக்கும் அரசியல் கட்சிகளின் பிரசாரம் நிறைவுற்றது.இந்த நிலையில், கருத்து கணிப்புகளை வெளியிடுவதற்கான கட்டுப்பாடுகள் தொடா்பான அறிவுறுத்தலை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.