

மதுரை
கும்பாபிஷேக பூஜைகள் நடந்து வரும் நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 5 வயது யானை அசாமில் இருந்து வந்தது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். திருவிழாவின்போது சுவாமிக்கு முன்பு டங்கா மாடு, யானை, ஒட்டகங்கள், குதிரைகள் அணிவகுத்து செல்வது வழக்கம். இதற்காக மீனாட்சி அம்மன் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள் இருந்தன. முன்பு கோவிலில் 7 யானைகள் இருந்தன. தற்போது பார்வதி என்ற ஒரு யானை மட்டுமே உள்ளது. அந்த யானையும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறது.
எனவே கோவிலுக்கு கூடுதலாக ஒரு யானை வாங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு 5 யானைகள் அசாமில் இருந்து கொண்டு வரப்பட்டன. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் புதிய யானை கோவிலுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 9-ந் தேதி ராஜஸ்தானில் இருந்து 2 ஒட்டகங்கள் உபயதாரர்கள் மூலம் கோவிலுக்கு கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான நேற்று அதிகாலை 2 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு துர்கா என்ற 5 வயது யானை அசாமில் இருந்து 3 நாட்கள் பயணமாக வந்தது. அந்த யானைக்கு கோவில் ஸ்தானீக பட்டர்கள் சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பித்தனர். கோவில் பணியாளர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
இந்த யானை அசாமில் உள்ள மானஸ் தேசிய பூங்காவில் இருந்து சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு மதுரை வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 7 யானைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் படிப்படியாக அந்த யானைகள் எண்ணிக்கை குறைந்தன. 68 ஆண்டுகள் வரை வாழ்ந்த பார்வதி யானை முதுமை காரணமாக உயிரிழந்தது. அதனுடன் இருந்த அங்கையர்கண்ணி என்ற யானையும் 2007-ம் ஆண்டு இறந்தது.
அதன் பின்பு கோவில் யானை பார்வதி மட்டும் தனியாக இருந்ததால் அதற்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே பக்தர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று தற்போது 5 வயதுள்ள துர்கா என்ற பெண் யானை விநாயகர் சதுர்த்தி தினத்தன்றும், கும்பாபிஷேகத்தையொட்டியும் வந்துள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.