மராட்டியத்தில் ஹெல்மெட் அணியாத 58 போலீசாருக்கு அபராதம்

இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த அதிகாரிகள் உள்பட 58 போலீசாருக்கு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் ஹெல்மெட் அணியாத 58 போலீசாருக்கு அபராதம்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம், லாத்தூர் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சாலை பாதுகாப்பு விதிகளை பொது மக்கள் மத்தியில் தீவிரமாக அமல்படுத்துவதற்கு முன்பாக, போலீசாரே அதற்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமோல் தாம்பே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த அதிகாரிகள் உள்பட 58 போலீசாருக்கு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமீறல் தொடர்பான விவரங்கள் சம்பந்தப்பட்ட போலீசாரின் பணி பதிவேடு குறிப்பு பக்கத்தில் பதிவு செய்யப்படும் என்றும், இது அவர்களின் அதிகாரப்பூர்வ சேவை பதிவின் ஒரு பகுதியாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்ட உள்ளது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அமோல் தாம்பே கூறுகையில், "சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பில் நாமே இருக்கிறோம். எனவே, சட்டத்தை பின்பற்றும் பொறுப்பு நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும். ஹெல்மெட் விவகாரத்தில் போலீசாருக்கு எந்தவித விதிவிலக்கும் அளிக்கப்பட மாட்டாது" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com