

விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த பெரியபாபுசமுத்திரம் பம்பை ஆற்றங்கரை ஓரமாக உள்ள சுடுகாட்டு பாதை அருகில் சிலர் கத்தி, உருட்டுக்கட்டைகளுடன் பதுங்கியிருப்பதாக கண்டமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கு பதுங்கியிருந்த 6 பேர் தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 6 பேரும் புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த அன்பரசன் (வயது 30), ஞானசவுந்தர் (27), ரவீந்திரன் (29), விக்னேஷ் (19), தமிழரசன் (19), கோட்டக்குப்பத்தை சேர்ந்த செல்வகணபதி (28) என்பதும், இவர்கள் 6 பேரும் கூட்டாக சேர்ந்து அவ்வழியாக செல்பவர்களை வழிமறித்து பணம் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டி பதுங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அன்பரசன் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த கத்தி, உருட்டுக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 6 பேரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.