

தேவதானப்பட்டி,
தேவதானப்பட்டி அருகே உள்ள காட்ரோடு சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த சோதனையில், 33 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 66 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து லாரி டிரைவர் மற்றும் அவருடன் வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த புண்ணியராஜ் (வயது 38), மணிகண்டன் (27) என்பது தெரியவந்தது.
மேலும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி, கன்டெய்னர் லாரி மூலம் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கன்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார்? மேலும் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.