கல்வராயன்மலையில் மாயமான 7 போலீசாரும் இருப்பிடம் திரும்பினர் - காவல்துறை தகவல்

வனப்பகுதிக்குள் மாயமான 7 போலீசாரை சக போலீசார் தீவிரமாக தேடினர்.
கல்வராயன்மலையில் மாயமான 7 போலீசாரும் இருப்பிடம் திரும்பினர் - காவல்துறை தகவல்
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிச்சிக்குள்ளாக்கியது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசா தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, கல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பட்டாலியன் போலீசார் உள்ளிட்ட போலீசார், சாராயம் தயாரிக்கும் ஊறல்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வராயன் மலையில் முகாமிட்ட சாராய வியாபாரிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பட்டாலியன் போலீசார் ஏழு பேர் மாயமாகினர். அடர்ந்த காட்டுப்பகுதியில் வழிமாறி சென்றிருக்கலாம் என சக போலீசார் தெரிவித்தனர். வனப்பகுதிக்குள் மாயமான 7 போலீசாரை சக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், கல்வராயன்மலையில் மாயமானதாக கூறப்பட்ட 7 போலீசாரும் பத்திரமாக மீண்டும் இருப்பிடம் திரும்பிவிட்டனர் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், 7 போலீசாரும் சாராய வேட்டையை முடித்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளனர். பின்னர் இருப்பிடம் திரும்பினர்; அனைவரும் நலமாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com