கோவில்பட்டியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 72 வீடுகள் திறப்பு: செல்பி எடுத்து அசத்திய கலெக்டர்

குலசேகரபுரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 72 வீடுகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
கோவில்பட்டியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 72 வீடுகள் திறப்பு: செல்பி எடுத்து அசத்திய கலெக்டர்
Published on

கோவில்பட்டி அருகே குலசேகரபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குலசேகரபுரம் ஊராட்சியில், குலசேகரபுரம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 72 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு தெரு விளக்கு, குடிநீர் தொட்டி, சாலை வசதி, குடிநீர் குழாய் உள்பட அடிப்படை வசதிகள் ரூ.88.22 லட்சம் மதிப்பில் செய்து தரப்பட்டன. இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட 72 வீடுகளும் இன்று திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சித்துறை) ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் கல்வெட்டையும் அவர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், 2024-25-ம் நிதி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,673 வீடுகள் கட்டப்பட்டது. அதில் 72 வீடுகள் குலசேகரபுரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. 2025-2026-ம் நிதி ஆண்டில் மாவட்டத்தில் 1,700 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது என்றார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள், அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் செல்பி எடுத்து அசத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ஹிமான்சு மங்கள், வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஸ்டீபன் ரத்தினகுமார், ஒன்றிய உதவி பொறியாளர் சங்கரசுப்பிரமணியன், பணி மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், ஊராட்சி செயலர் சீனிவாசன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினர் தங்கமாரியம்மாள் தமிழ்ச்செல்வன், லிங்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் நாகலட்சுமி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பீட்டர், ரமேஷ், திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் குருராஜ், மாதேஸ்வரன், திமுக ஒன்றிய செயலர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெயகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com