

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நாகையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் லட்சுமி நாராயணன், மாவட்ட செயலாளர் உஷா, மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், துணை செயலாளர் அந்தோணியம்மாள், வட்டார பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எண்ணும் எழுத்தும் சார்ந்த புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கையேடுகளை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். அந்தப் புத்தகங்களை தமிழ்நாட்டு பாடநூல் புத்தகங்கள் வழங்குவது போல அந்தந்த பள்ளிகளுக்கே நேரில் சென்று வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் மருத்துவப்படிப்புக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, காலை உணவு திட்டம் போன்ற அனைத்து நலத்திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகர பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.