புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து 8 கார்கள் சேதம் - டாக்டர் மீது வழக்குப்பதிவு

புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 8 கார்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து 8 கார்கள் சேதம் - டாக்டர் மீது வழக்குப்பதிவு
Published on

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் சத்தி-ஈரோடு மெயின் ரோட்டில் பைபாஸ் பாலம் அருகே கார் ஒர்க்ஷாப் நடத்தி வருபவர் குழந்தைசாமி (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பழுது நீக்குவதற்காக வந்த கார்களை ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

அந்த பகுதியில் புதிதாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக 80 அடி நீளத்தில் சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சித்தோட்டில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் மேடான பகுதியில் இருந்த மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி 8 கார்கள் நொறுங்கி சேதமடைந்தன.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நேற்று காலை குழந்தைசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது கார்கள் சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து குழந்தைசாமி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வரும் சக்திவேல் என்பவர் புதிதாக திருமண மண்டபம் கட்டி வருவது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் திருமண மண்டப உரிமையாளரான டாக்டர் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com