

சென்னை,
பெட்ரோல் மற்றும் கியாஸ் விற்பனை நிலையங்கள் தொடங்க போலீஸ் கமிஷனர் பெயரில் போலி தடையில்லா சான்றிதழ் தயாரித்து மோசடி செய்ததாக சிவக்குமார், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி எதிர்த்து அவர்கள் இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ் மூலம் எத்தனை பெட்ரோல், கியாஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ்கள் மூலம் 91 பெட்ரோல் மற்றும் கியாஸ் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளதாக கூறினார்.
இந்த 91 பெட்ரோல் மற்றும் கியாஸ் விற்பனை நிலையங்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் எண்ணெய்நிறுவனங்கள் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் போலி பெட்ரோல் மற்றும் கியாஸ் விற்பனை நிலையங்கள் மட்டுமல்லாமல், போலி தடையில்லா சான்றிதழ்கள் மூலம் செயல்படும் மதுபான பார்களையும் கண்டறிந்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.