மின்கம்பியில் உரசிய பஸ்.... மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சோகம்

மின்கம்பியில் உரசிய பஸ்.... மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சோகம்

டீ குடிப்பதற்காக பஸ்சை சாலையோரம் நிறுத்திய போது மின்கம்பத்தில் உரசியதால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பஸ்சில் சென்றுள்ளனர். அப்போது பஸ் ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்த போது வழியில் இருந்த டீ கடையில் நிறுத்தி உள்ளனர். அப்போது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்சாரக்கம்பி பஸ்சின் மேல் தலத்தில் உரசியதாக தெரிகிறது.

இதன் காரணமாக பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாமல் டீ அருந்துவதற்காக பஸ்சில் இருந்து கீழே இறங்கிய அகல்யா (20) என்ற பெண் பஸ் கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற இருவரையும் மின்சாரம் தாக்கியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அகல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலணி அணியாமல் பஸ்சின் இரும்பு கைப்பிடியைப் பிடித்து இறங்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதாக உயிரிழந்த பெண்ணுடன் உடனிருந்த பெண் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com