60 ஆண்டுகளுக்கு பிறகு 'இப்படி ஒரு மாற்றம்...' தவெக அரசை பாராட்டிய அன்புமணி

நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்தை அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசியுள்ளார்.
60 ஆண்டுகளுக்கு பிறகு 'இப்படி ஒரு மாற்றம்...' தவெக அரசை பாராட்டிய அன்புமணி
Published on

சென்னை,

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனிடையே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வலியுறுத்தி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி நீர்ப்பாசன பகுதிகளில் விழிப்புணர்வு பயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், பிரசார பயணத்திற்கு இடையே நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்தை அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் நீர் திட்டங்கள் குறித்த மனு ஒன்றையும் அன்புமணி அளித்தார்.

பின்னர் அன்புமணி கூறுகையில், ”தமிழ்நாட்டில் இருக்கின்ற நீர்த் திட்டங்கள் சம்பந்தமாக என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன தேவை, எது அவசரம் உள்ளிட்ட தொடர் திட்டங்களை பற்றி ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதாக நாங்களே நேரில் வந்துள்ளோம். இதை ஒரு மிகப்பெரிய மாற்றமாக நான் பார்க்கிறேன். 60 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மாற்றம்... எதிர்க்கட்சிகளை அழைத்து இப்படி மரியாதை கொடுத்து அவர்களோட யோசனைகள், ஆலோசனைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கிற வகையில் இந்த அரசு இருக்கிறது. அதற்கு நான் பாராட்டுகிறேன்’ என்று கூறினார்.

முன்னதாக தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்த அன்புமணியை தனது அறையில் இருந்து வெளியே வந்து அமைச்சர் என்.ஆனந்த் வரவேற்றார். பின்னர் அன்புமணி எடுத்து வந்த சால்வையை வாங்கி அவருக்கே போர்த்தி விட்டார். தொடர்ந்து அமைச்சருக்கான நாற்காலியில் உட்காராமல் அன்புமணி அருகிலேயே சேர் போட்டு அமைச்சர் என்.ஆனந்த் அமர்ந்தார். நீண்ட நேரம் வற்புறுத்தி அவரை அமைச்சருக்கான சேரில் அன்புமணி அமர வைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com