ஆமை புகுந்த வீடும், பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது - ப.சிதம்பரம் விமர்சனம்

தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டு முயற்சி நடக்கலாம், ஏனெனில் பா.ஜ.க நுழைந்துள்ளது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்டு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் இதுவரை வாக்குத்திருட்டு நடக்கவில்லை. ஆனால் பீகாரில் வாக்குத்திருட்டு நடந்துள்ளது. கர்நாடகத்தில் சில தொகுதிகளில், மராட்டியத்தில் பல தொகுதிகளில் வாக்குத்திருட்டு நடந்துள்ளது.தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் வாக்குத்திருட்டு நடத்த முடியாது என்று நான் டெல்லியில் உத்தரவாதம் வழங்கியுள்ளேன். காரணம், கேரளாவில் இடதுசாரி அணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வலிமையான கூட்டணிகள் உள்ளன.
அதேபோல், தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டு நடக்காது. ஏனென்றால், ஒரு கிராமத்தில் வெளிநபர் நுழைந்தாலும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றாலும், உள்ளூர்வாசிகள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் பீகாரில் அப்படி இல்லை. அதனால் அங்கு வாக்கு திருட்டு நடக்கிறது.தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி வலிமையாக உள்ளது. அதேபோல், எதிர்க்கட்சியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அ.தி.மு.க கூட்டணியும் வலிமையாக உள்ள வாக்குத்திருட்டு விவகாரத்தில் நாம் எச்சரிக்கையோ இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டு முயற்சி நடக்கலாம், ஏனெனில் பா.ஜ.க நுழைந்துள்ளது. பா.ஜ.க-வோடு கூட்டணியில் உள்ள அ.தி.மு.க வாக்குத்திருட்டை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் பா.ஜ.க-விற்கு மட்டுமே வாக்குத் திருட்டு வழி திறந்திருக்கும். "ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் உருப்படாது" என்ற பழமொழி போல, பா.ஜ.க நுழைந்த மாநிலமும் உருப்படாது. இதனால், இன்னும் ஏழு-எட்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ளது. வாக்காளர் பட்டியல் வரும் போது நாம் விழிப்படன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






