மரம் விழுந்ததில் லாரி டிரைவர் பரிதாப சாவு

மரம் விழுந்ததில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
மரம் விழுந்ததில் லாரி டிரைவர் பரிதாப சாவு
Published on

லாரி டிரைவர்

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வம்(வயது 53). லாரி டிரைவரான இவர் லாரியில் ஜெனரேட்டரை ஏற்றிக்கொண்டு, அரியலூர் அருகே வாலாஜாநகரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தார்.

ஜெனரேட்டரை லாரியில் இருந்து இறக்காததால் கடந்த 4 நாட்களாக செல்வம் அங்கேயே தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் இப்பகுதியில் மழை பெய்தது. இதையடுத்து நேற்று காலை லாரியில் இருந்து ஜெனரேட்டரை இறக்கும் பணி நடைபெற்றது.

மரம் விழுந்தது

அப்போது அப்பகுதியில் அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையின் ஓரத்தில் இருந்த பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து, அப்பகுதியில் இருந்த மின்கம்பம் மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த செல்வத்தின் மீது விழுந்தது.

இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அருகில் நின்றவர்கள் சிதறி ஓடியதால் அவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

விசாரணை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து அரியலூர் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரக்கிளைகளை அகற்றி செல்வத்தின் உடலை மீட்டனர்.

இதையடுத்து போலீசார், செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வத்தின் மீது மரம் விழுந்ததில் இறந்தாரா? அல்லது மின்சாரம் பாய்ந்ததில் இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com