

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆண் ஒருவர் உயிரிழந்தது குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி உட்கோட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவேலங்குளம் பகுதியில், களக்காடு-சேரன்மகாதேவி சாலையோரத்தில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் ராமகிருஷ்ணன் (வயது 48) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
களக்காடு போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு பன்றி பண்ணைக்கு செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்ற ராமகிருஷ்ணன், இன்று அதிகாலை சாலையோரத்தில் காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்தில் உடலை இழுத்துச் சென்ற தடயங்கள் காணப்பட்டதுடன், அவரது சட்டை, செல்போன் மற்றும் சைக்கிள் ஆகியவை சம்பவ இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டு போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே இந்த நபர் உயிரிழந்தது குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அருகில் வசிக்கும் சத்தியா என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் அறிவியல் உதவி அதிகாரி மற்றும் கைரேகை நிபுணர் ஆகியோர் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஸ் பா.சாஸ்திரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை மற்றும் தடய சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக, நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. மற்றும் களக்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.