

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொள்ளுமேட்டுத் தெருவை சேர்ந்த சகாபுதீன் மகன் ஜமால்முகமது (வயது 36). இவர் நேற்று நள்ளிரவில் ரமலான் சிறப்பு தொழுகையை முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது மதுபோதையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென நடந்து வந்த ஜமால்முகமதுவை கண்மூடித்தனமாக சரமாரியாக அடித்து தாக்கினர். மேலும் அந்த பகுதியில் நடந்து வந்தவர்களையும் துரத்திச் சென்று தாக்கினர். இதைப் பார்த்த சிலர் கூச்சலிட்டு சத்தம் போட்டதால் அங்கிருந்து அந்த 6 பேரும் தப்பி சென்றனர்.
இதுகுறித்து பலத்த காயமடைந்த ஜமால்முகமது சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் சிதம்பரம் டி.எஸ்.பி. பிரதீப் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட போலீசார் கொள்ளுமேட்டுத்தெரு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது சிதம்பரம் ஓமகுளம் பகுதியை சேர்ந்த ஜெயசங்கர் மகன் அரவிந்தன்(19) மற்றும் 5 சிறுவர்கள் சேர்ந்து மது போதையில் தாக்கியது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனர். மேலும் 5 சிறுவர்களை கடலூர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் ரோட்டில் சென்றவர்களை தாக்கிய சம்பவத்தில் சிறுவர்கள் ஈடுபட்டதால் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.