

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தேர்தல் முடிவு வைத்து ஒரு கட்சியின் பலம், பலவீனத்தை தீர்மானித்துவிட முடியாது. கடந்த கால சட்டமன்ற முடிவுகளை எல்லாம் பார்க்க வேண்டும். நாட்டில் அனைத்து மாநிலங்களிலும், மத்தியிலும் 1967 வரை காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி நடத்தியது. 1967-ல் 8 மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றது. 1977-ல் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது.
அதே போல் தமிழ்நாட்டில 1971-ல் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் 1977-ல் தி.மு.க. தோற்றது, அதைத் தொடர்ந்து 1989-ல் மீண்டும் வெற்றி பெற்றது. 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல 234 தொகுதிகளில் திருத்திரைபூண்டி, திருவாரூர், சென்னையில் கலைஞர் போட்டியிட்ட துறைமுகம் தொகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அரந்தாங்கி தொகுதி ஆகிய 4 தொகுதிகளை தவிர மற்ற 230 இடங்களிலும் அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
அத்தகைய இமாலய வெற்றியை பெற்ற அ.தி.மு.க., 1996 தேர்தலில் நான்கே இடங்களில்தான் வெற்றி பெற்றது. ஜெயலலிதா தோற்றுப் போனார். தொடர்ந்து 2001-ல் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றது, தி.மு.க. தோற்றது. இதுபோல் கடந்த காலங்களில் வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி வந்துள்ளன.
தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அணி தோற்றிருக்கிறது. தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிட்ட நாங்களும் தோற்றிருக்கிறோம். எங்கள் அணி தோற்றிருக்கிறது. த.வெ.க. பெற்ற வெற்றியை ஏற்கிறோம். வெற்றியை மதிக்கிறோம். ஆனால் இது நிரந்தரம் அல்ல என்பதை தோற்றவர்களும், வெற்றி பெற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இது ஜனநாயக நாடு. மக்கள் தங்களது விருப்பத்தின்படி ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு த.வெ.க.வை பெரிய நம்பிக்கையோடு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதை நாங்களும் ஏற்கிறோம். ஆனா இது நிரந்தரம் நிரந்தரம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.