பள்ளி மாணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை - தந்தை வெறிச்செயல்

பள்ளி மாணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளி மாணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை - தந்தை வெறிச்செயல்
Published on

கடலூர்,

பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்கிற குமார் (வயது 38). இவருடைய மனைவி சுமதி (32). இவர்களுக்கு அர்ஜுனன் (14) என்ற மகனும், லதா(11), நந்தினி (7) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இதில் அர்ஜுனன் அங்குசெட்டிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். குமார், சிறுவத்தூர்-திடீர் குப்பம் சாலையில் உள்ள ஒரு செங்கல் சூளையில் குடும்பத்தினருடன் தங்கி இருந்து அங்கு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு குமார், சுமதியிடம் மது குடிக்க பணம் கேட்டார்.

அதற்கு அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனன், ஏன் அம்மாவிடம் தகராறில் ஈடுபடுகின்றீர்கள் என்று குமாரை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த குமார் தனது மகன் என்றும் பாராமல் அர்ஜுனனை தாக்கி கீழே தள்ளினார்.

பின்னர் அம்மி கல்லை தூக்கி அவனது தலையில் போட்டார். இதில் அர்ஜுனன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானான். இதையடுத்து குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அர்ஜுனன் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com