பிறந்த 3-வது நாளில் பெண் சிசு புதக்கப்பட்டதாக பரபரப்பு

கிருஷ்ணாபுரம் அருகே பிறந்த 3-வது நாளில் பெண் சிசு புதைக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடத்தை தோண்டியும் உடல் கிடைக்காததால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிறந்த 3-வது நாளில் பெண் சிசு புதக்கப்பட்டதாக பரபரப்பு
Published on

கிருஷ்ணாபுரம் அருகே பிறந்த 3-வது நாளில் பெண் சிசு புதைக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடத்தை தோண்டியும் உடல் கிடைக்காததால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரகசிய தகவல்

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே பி. மோட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மனைவி பெருமா. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமாவிற்கு 3-வது பெண்சிசு பிறந்ததாகவும், அந்த பெண்சிசு வீட்டின் அருகே யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டதாகவும் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளி கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு, தர்மபுரி தாசில்தார் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் பி.மோட்டுப்பட்டிக்கு நேரில் சென்று பெருமா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தனக்கு 3- வது பெண் சிசு பிறக்கவில்லை என்று பெருமா கூறியுள்ளார்.

போலீசார் அதிர்ச்சி

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அங்கு பெண்சிசு புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடம் தோண்டி பார்க்கப்பட்டது. அப்போது அங்கு பெண் சிசுவின் உடல் இல்லை. இதனால் போலீசாரும், வருவாய்த்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பெருமாவிற்கு அண்மையில் பெண் சிசு பிறந்ததா? அல்லது யாராவது தவறான தகவல் அளித்து உள்ளார்களா? என்பது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் பெருமா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com