திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு? - தமிழக அரசு விளக்கம்

திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டரம்பட்டு வட்டம் கீழ்வலசை என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான உயிரினம் உலவுவதாகவும், அது காட்டில் திடீரென்று ஒரு பெண்ணை தாக்கியதாகவும் குறிப்பிட்டு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று பரவி வரும் இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இது முற்றிலும் வதந்தி. நீளமான நகங்கள், 4 விரல்களை கொண்ட கால்கள் மற்றும் ஆட்டின் தலையுடைய மனித உருவிலான வித்தியாசமான உயிரினத்தின் புகைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனை 'ஆடு மனிதன்' என்றும், வேற்றுக்கிரகவாசி என்றும் குறிப்பிட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வதந்தி பரப்பப்பட்டது. இது 2011-ம் ஆண்டு கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட படமாகும். அதை பகிர்ந்து திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






