புதிதாக அமைத்த சாலையில் திடீர் பள்ளம்

கோட்டூர் கடை வீதியில் புதிதாக அமைத்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
புதிதாக அமைத்த சாலையில் திடீர் பள்ளம்
Published on

பொள்ளாச்சி

கோட்டூர் கடை வீதியில் புதிதாக அமைத்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

சாலையோரத்தில் பள்ளம்

பொள்ளாச்சி அருகே கோட்டூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா சார்ந்த பகுதி என்பதாலும் தினமும் வெளியூர்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்கின்றன. கோட்டூர் பகுதிகளில் சினிமா படப்பிடிப்பும் அதிகமாக நடைபெறும். இதனால் கோட்டூரில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டூரில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்கிடையே சாலை அமைத்த சில மாதங்களிலேயே கடை வீதியில் சாலையோரத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.

தவறி விழும் பொதுமக்கள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோட்டூர் பகுதியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. கடை வீதி பகுதியில் சாலையோரத்தில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டு உள்ளது. சாலை அமைத்த சில மாதங்களிலேயே பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சுமார் 2 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளமாக இருப்பதால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. மேலும் நடந்து வரும் பொதுமக்களும் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விடுகின்றனர். இந்த பள்ளத்தை சரிசெய்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com