'களவாணி' படத்தை மிஞ்சிய கல்யாணம்.. காதலிக்கு காருக்குள் தாலி கட்டிய என்ஜினீயர்

காருக்குள் தனது கண் முன்னே மகளுக்கு காதலன் தாலி கட்டியதை கண்டு ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகர் கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் அஜய் (வயது 26), என்ஜினீயர். இவருடைய உறவினரான நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த தண்டபாணியின் மகளும், என்ஜினீயரிங் கல்லூரி மாணவியுமான நந்தினியும் (21) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதாக தெரிகிறது. இதனிடையே நேற்று வழக்கம்போல் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரிக்கு நந்தினி சென்றார். மாலையில் அவர் பஸ்சில் நாமக்கல்லுக்கு வந்து இறங்கியுள்ளார். பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி, நாமக்கல்லில் உள்ள சேலம் சாலை சந்திப்பில் அஜய் மற்றும் அவரது உறவினர்கள் யுவராஜ், ஜெயலட்சுமி ஆகியோர் உள்பட 4 பேர் காத்திருந்த காரில் நந்தினி ஏறி உள்ளார்.
இதனிடையே மாணவியை அழைத்து செல்ல அங்கு வந்த அவரது தந்தை தண்டபாணி மகள் காதலனுடன் காரில் ஏறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். மேலும் அவர் அஜய் மற்றும் உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் உறவினர்கள் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வரவழைத்து தகராறில் ஈடுபட்டார்.
அப்போது காருக்குள் சென்ற அஜய் தான் கையில் வைத்திருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இருவரும் மோதிரமும் மாற்றி கொண்டனர். காருக்குள் தனது கண் முன்னே மகளுக்கு காதலன் தாலி கட்டியதை கண்டு ஆத்திரமடைந்த தண்டபாணி மற்றும் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் காரில் இருந்த அஜய் உள்ளிட்டோரை தாக்கினர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவத்தை கண்ட போக்குவரத்து போலீசார் பொதுமக்களின் உதவியோடு, அஜய், நந்தினி உள்ளிட்ட 5 பேரை மீட்டு நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அஜய்யை விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாக நந்தினி தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பினரையும் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.






