வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பெண் பலி

கவரைப்பேட்டை அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வேலை செய்து கொண்டிருந்த 8 பெண்கள் காயமடைந்தனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பெண் பலி
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே உள்ள அமிதாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 58). விவசாய கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவர் தனது வயலில் களை எடுக்க செல்லம்மாளை அழைத்திருந்தார். அதன்படி செல்லம்மாள் மற்றும் 8 பெண்கள் பாபுவிற்கு சொந்தமான  வயலில் நேற்று களைகளை எடுத்து கொண்டிருந்தனர்.

அந்த பகுதியில் மதியம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. கொட்டும் மழையையும் பெருட்படுத்தாமல் பெண்கள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென வயிலில் வேலை செய்து கொண்டிருந்த செல்லம்மாள் மீது பயங்கர இடி சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய செல்லம்மாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

8 பேர் காயம்

மேலும் அவருடன் வேலை செய்து கொண்டிருந்த வனஜா, தமிழரசி, சகிலா, நாகேஸ்வரி, கஸ்தூரி, பொம்மி உள்பட 8 பேர் காயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com