மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் திடீர் சாவு

சின்னசேலம் அருகே மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் திடீரென பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் திடீர் சாவு
Published on

சின்னசேலம், 

மருந்தகத்தில் ஊசி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் ராகவேல் மகன் பிரபு (வயது 40) இவரது மனைவி சங்கீதா (38). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை சங்கீதாவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது மகள் சுவேதாவுடன் இந்திலி பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருந்தகத்திற்கு சென்றார்.

அங்கு அவருக்கு மருந்தக ஊழியர்கள் ஊசி போட்டு மாத்திரைகள் கொடுத்ததாக தெரிகிறது. இருப்பினும் உடல்நிலை சரியாகாததால் உலகங்காத்தான் கிராமத்தில் வேலு என்பவர் நடத்தும் தனியார் மருந்தகத்திற்கு சங்கீதா சென்றார். அங்கு அவருக்கு குளுக்கோசில் ஊசி மருந்து கலந்து போட்டதாக கூறப்படுகிறது. அப்போது சங்கீதாவுக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து வேலு ஒரு ஆட்டோ மூலம் சங்கீதாவை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நடவடிக்கை

அங்கு சங்கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இறந்தாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் மருந்தகத்தில் சிகிச்சை பெற்ற பெண் திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சின்னசேலம் பகுதியில் உள்ள சில மருந்தகத்தில் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com