

நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலையில் உள்ள கிருபா நகரை சேர்ந்தவர் சதீஷ் (30 வயது). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (24 வயது). இவர்கள் இருவரும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.
சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சதீஷ், வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து தமிழ்ச்செல்வியின் கழுத்தை சுற்றி நெரித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி தப்பிக்க போராடினார். ஆனால் சதீஷ் விடாமல் கழுத்தை நெரித்ததால் தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியை கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.