

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தில் வசித்துவரும் உத்திரம் மகன் அருள்முத்து (வயது 22). மது போதைக்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு ஆறுமுகநேரிலிருந்து காயல்பட்டணம் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் படுத்து தூங்கி விட்டாராம்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை ஆறுமுகநேரி காயல்பட்டினத்தை கடந்து சென்ற போது தண்டவாளத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அருள்முத்து மீது ஏறி இறங்கியதில் அவரது உடல் முழுவதும் துண்டு துண்டாக வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.