

நாகப்பட்டினம்,
நாகப்பட்டினத்தில் வாலிபர் ஒருவர் ஓடும் பைக்கில் ஹெல்மெட்டை கழற்றிய போது பைக் நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அகிலன் (வயது 23) . இந்த வாலிபர் நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் சாலையின் விதிகளுக்குப் புறம்பாக, வாகனத்தை அதிவேகமாக இயக்கியதுடன் வலதுபுறமும் இடதுபுறமுமாக வளைந்து நெளிந்து ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்றுள்ளார்.
மேலும், அவர் அவ்வாறு அலட்சியமாகச் சென்று கொண்டிருந்தபோதே, தனது தலையிலிருந்த ஹெல்மெட்டை கழற்ற முயன்றுள்ளார். ஹெல்மெட்டை கழற்றிய அடுத்த சில நொடிகளில் பைக்கின் கட்டுப்பாட்டை இழந்த அகிலன், நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவர் பின்னால் வந்த காரின் முன்பகுதியில் பலமாக மோதியுள்ளார். அதில் மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த நிலையில் அகிலனுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த காரின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த டேஷ்போர்டு கேமராவில் இந்த ஒட்டுமொத்த விபத்தும் தெளிவாகப் பதிவாகி இருந்தது. வாலிபர் வண்டியை வளைத்து ஓட்டுவது, ஹெல்மெட்டை கழற்றுவது மற்றும் காரின் முன் விழுந்து விபத்துக்குள்ளாவது உள்ளிட்ட காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் உள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாய்மேடு காவல்துறையினர், அகிலனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் வாகனத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் வாலிபர் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.