

புதுவண்ணாரப்பேட்டை,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காசி மேடு பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவியை அந்த ஓட்டலில் வேலை செய்த பழவேற்காட்டை சேர்ந்த ஜானகிராமன் (29 வயது) என்பவர், ரகசியமாக செல்போனில் புகைப்படம் எடுப்பதை அவர் கவனித்தார்.
இதையடுத்து அந்த நபர் ஜானகிராமனிடம் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்ததால், அக்கம் பக்கத்தினரை அழைத்து செல்போனை பறிமுதல் செய்து பார்த்தார். அதில் தனது மனைவியின் புகைப்படம் மட்டுமல்லாது பெண்கள், சிறுமிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பொதுமக்கள் ஜானகிராமனை பிடித்து தர்மஅடி கொடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜானகிராமன் பெண்களை செல்போனில் ரகசியமாக புகைப்படம் எடுத்து தனிமையில் பார்த்து ரசித்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.