மின்விசிறியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

மின்விசிறியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
மின்விசிறியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
Published on

சென்னை கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சர்வேஷ் (வயது 24). பெயிண்டரான இவர், காசிமேட்டைச் சேர்ந்த பவித்ரா (20) என்ற பெண்ணை காதலித்து, ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மாத பெண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு பவித்ரா, வீட்டில் தூங்க சென்றார். இதற்காக மின்விசிறியை(டேபிள் பேன்) ஆன் செய்து, காற்று நன்றாக வருவதற்கு அதனை சரி செய்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பவித்ராவை சர்வேஷ் மற்றும் உறவினர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பவித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பவித்ராவுக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பிறகே பவித்ரா, மின்சாரம் தாக்கி இறந்தாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com