ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் மக்கள் குவிந்துள்ளனர்.
ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
Published on

ராமேஸ்வரம்,

இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பித்ருகளுக்கு தர்ப்பணம்

அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். முன்னோர்களை வணங்கி ஆராதனைகள் செய்து அவர்களின் பரிபூரணமான ஆசியைப் பெறக்கூடிய அற்புத நாள். மாதந்தோறும் அமாவாசை வரும். அதுவே முன்னோர்களை வணங்குவதற்கு உண்டான நாள்தான்.

குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாட்களில் புனித நீர்நிலைகளில் பித்ருகளுக்கு தர்ப்பணம் கொடுத்து, தங்களது முன்னோர்களை வழிபடுவது மக்களின் வழக்கம். இந்த நாட்களில் முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல்

அவ்வகையில் ஆடி அமாவாசை நாளான இன்று புனித நீராடல் நிகழ்ச்சி அதிகாலை முதலே தொடங்கியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வரும் நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு பின்னரே நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

இதேபோல் கன்னியாகுமரியில் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யத்திலும், கோடியக்கரையிலும் ஏராளமானோர் குவிந்தனர். காலை முதலே புனித நீராடிய அவர்கள் பித்ருக்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை, திருவையாறு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

குற்றாலம் மெயின் அருவி

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் அதிகாலை முதலிலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர்.

மாமல்லபுரம் கடற்கரை மற்றும் தலசயன பெருமாள் கோயில் திருக்குளம் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் பகுதிகளில் இருந்து வந்து ஏராளமானோர் தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com