

சென்னை,
ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராட ஷவர் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் 18-ந்தேதி காவிரி கரையோர மாவட்டங்களில் இந்த விழா ஆண்டாண்டு காலமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அகண்ட காவிரி பாயும் திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டும். கடந்த ஆண்டு அம்மா மண்டபத்தின் 12 படிக்கட்டுகளையும் தொட்டபடி காவிரி புதுப்புனலாக பாய்ந்து சென்றது. இதன் காரணமாக காவிரியில் புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்தது மற்றும் கர்நா டகத்தில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படாததால் காவிரி ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், ஆடிப்பெருக்கு விழாவையும் மக்கள் கடந்த ஆண்டைப்போல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆனாலும் ஆடிப்பெருக்கு நாளன்று சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் நிலைப்பதற்காக காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்வார்கள். புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு, புனித நீராடி வழிபாடு செய்வது உண்டு. காவிரியில் தண்ணீர் இல்லாததால் புனித நீராடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் சாக்கடை போல் தண்ணீர் சிறிதளவே தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ள அந்த தண்ணீரில் புனித நீராட முடியுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் காரணமாக அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள 'ஷவரில்' பக்தர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக அம்மா மண்டபம் படித்துறை பகுதியில் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு விழாவின்போது மக்கள் அதிக அளவில் கூடும்போது கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவிரி ஆற்றுக்குள் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையில் மக்கள் புனித நீராட வசதியாக அங்கு பம்பு செட் அமைக்கப்பட்டுள்ளன. வருண பகவானும், கர்நாடக மாநில அரசும் கைவிட்டதால் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள ஊர்களில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா களை இழந்து காணப்படுகிறது. இந்த புண்ணிய நாளில் ஆறுகளில் தண் ணீர் இல்லாததால் குழாயடியில் பூ. பழங்களை படைத்து வழி பட மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் ஓடுவதால் ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடுவார்கள் என்பதால் படித்துறை பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் இறங்கி குளிக்க முடியாதவர்களுக்காக படித்து றைகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு குளிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆற்றங்கரையோரம் பவானி தீயணைப்பு நிலையம் சார்பில் நீச்சல் வீரர்களும், பவானி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்களுடன் நடமாடும் முதலுதவி சிகிச்சை மையமும், ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த 2019-ம் ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீரின்றி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. அப்போது பக்தர்கள் குளிக்க வசதியாக 'ஷவர்' அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2020, 2021, 2022, 2023, 2024, 2025-ம் ஆண்டுகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியதால், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் இல்லாமல் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.