ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆதரவும் எதிர்ப்பும்

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதல் அமைச்சரின் உத்தரவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆதரவும் எதிர்ப்பும்
Published on

சென்னை

தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என கூறினார்.

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்து உள்ளன.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு உண்மை தெரிந்தால் நல்லதுதானே. வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என கூறினார்.

ஒ.பன்னீர்செலவம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் என்ற அறிவிப்பு ஓபிஎஸ் அவர்களின் தர்மயுத்தத்துக்கு கிடைத்த வெற்றி. ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய நிபந்தனைகள் ஏற்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புகளை வரவேற்கிறோம். முதலமைச்சரின் அறிவிப்பு இணைப்பு பேச்சுவார்த்தைக்கான தடைகளை அகற்றி இருக்கிறது. போயஸ் இல்லத்தை நினைவிடமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். என கூறி உள்ளார்.

பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஹெச் ராஜா கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் என்ற அறிவிப்பு இரு அணிகளின் இணைப்புக்கு வழிவகுக்கும் என கூறினார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்ஃபோன்ஸ் கூறியதாவது:-

6 மாதங்கள் கடந்த பிறகு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் என்பது காலம் கடந்த முடிவு. பதவியில் இருப்பதற்காக தினசரி ஒவ்வொரு முடிவுகளை அறிவிப்பது கவலை அளிக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடுநிலையானதாகவும், சுதந்திரமாகவும் இருக்கும் என்று கூற முடியாது என கூறினார்.

தி.மு.க செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-

திமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் என்பது கண்துடைப்பு. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் என்ற அறிவிப்பு பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வெளியிடப்பட்டது. அதிமுகவின் எல்லா அணிகளும் மாறி மாறி பாஜகவின் காலில் விழுந்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தை திமுக கேட்ட போது முதலமைச்சர் பழனிசாமி ஏற்கவில்லை.
பாஜகவின் விருப்பப்படி சசிகலா குடும்பத்தை ஓரம்கட்ட ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.

தினகரன் அணியை சேர்ந்தத தங்க தமிழ் செல்வன் எம்.எல்.ஏ கூறியதாவது:-

ஓபிஎஸ் கேட்டதற்காக ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைத்தார்கள் என்றால் மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதா மரணத்தில் என்ன தவறு நடந்துள்ளது என்று விசாரணை ஆணையம் அமைக்கிறார்கள் என கூறினார்.

ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும் என்பதால் அதைக் கோருகிறோம். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அது இன்னும் நிறைவேறவில்லை. சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து இன்னும் வெளியேற்றவில்லை. வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என கூறினார்.

அ.தி.மு.க கர்நாடக செயலாளர் புகழேந்தி ( தினகரன் அணி ) கூறியதாவது:-

விசாரணை நியாயமாக இருக்க வேண்டும். சுயநலமாக இருக்கக் கூடாது. ஜெயலலிதா மரணத்தில் விசாரணை வேண்டும் என்று டிடிவி தினகரன் மேலூர் கூட்டத்தில் கேட்டு கொண்டதற்கு ஏற்ப தற்போது முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com